“நிச்சயமாக நீங்கள் சிறந்த
முறையில் வாதிடுங்கள்”-அல்ஹதீஸ்
ஓர் ஊரில் ஒரு பெரும் அறிஞர் வாழ்ந்து வந்தார். அவர் மிகச் சிறந்த மார்க்க அறிவு மிக்கவராகவும் உயர்ந்த பண்பாடுடையவராகவும் காணப்பட்டார். மேலும் அவர் நல்ல வாதாட்டத் திறமை மிக்கவராகவும் இருந்தார். இதனால் பலரும் அவரிடம் வந்து உபதேசம் கேட்டு திருந்தி வாழ்ந்தனர்.
ஒருமுறை ஒரு முதியவர் அறிஞரிடம் வந்து “அறிஞரே! என் மகன் ஒரு சிறந்த இளைஞன். ஆனாலும் அவன் அண்மைக் காலமாக மது அருந்துகிறான். நான் எத்தனை தடவைகள் அறிவுரை சொன்னாலும் அவன் கேட்பதாயில்லை. இஸ்லாத்தில் மது அருந்துவது கூடாது என்று நான் சொன்னால் அவன் இல்லை மது அருந்துவது ஆகுமானதே என்று வாதாடுகிறான்” என்றார். மேலும் நீங்கள் தான் என் மகனை நல்வழிப்படுத்த வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார். அதற்கு அறிஞர் “சரி நான் முயற்சிக்கிறேன். உங்கள் மகனை என்னிடம் அனுப்பி வையுங்கள்” என்றார்.
மறுநாள் அந்த இளைஞன் அறிஞரிடம் வந்தான். அறிஞரும் இளைஞனோடு சற்று நேரம் உரையாடி விட்டு பின்னர் “இளைஞனே! மது அருந்துவது தமது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. அது எம்முடலுக்கு தீங்கானது” என்றார். அதற்கு இளைஞன் “அறிஞரே! திராட்சைப் பழம் உண்ணுவது தடுக்கப்பட்டுள்ளதா?” என்றார். அதற்கு அறிஞர் “இல்லை” என்றார். உடனே இளைஞன் “சரி அதனை நான் கொஞ்சம் புல்லோடு சாப்பிட்டால்...?” என்றான். அதற்கும் அறிஞர் “தாராளமாக சாப்பிடலாம்” என்றார். பின்னர் இளைஞன் “சரி அப்படியாயின் திராட்சையையும் புல்லையும் நீரால் கழுவி ஊற வைத்து அருந்தினால்...” என்றான். அதற்கும் அறிஞர் “ம்... அதனையும் அருந்துவதில் தவறில்லை... குடித்து மகிழலாம்” என்றார். எனவே, இளைஞன் அறிஞரிடம் “பார்த்தீர்களா! மதுபானமும் திராட்சை, நீர், ஒரு வகை புல் தாவரம் ஆகியவற்றிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. எனவே, இவையனைத்தும் ஆகுமானது என்றால் மது அருந்துவதும் ஆகுமானதே. அது உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தப் போவதில்லை” என்றான். உடனே அறிஞர் “சரி, இளைஞனே! நான் உன் மீது சற்று நீரை ஊற்றினால் உனக்கு வலிக்குமா?” என்றார். அதற்கு இளைஞன் “இல்லை” என்றான். பின்னர் அறிஞர் “சரி அந்த நீரில் சற்று களியை கலந்து ஊற்றினால்” என்றார். அதற்கும் இளைஞன் “அப்போதும் வலிக்காது...” என்றார். அப்போது அறிஞர் “சரி அப்படியாயின் களியையும், நீரையும் சேர்த்து செய்யப்பட்ட ஒரு பெரிய செங்கல்லால் உன்னை நான் அடித்தால் உனக்கு வலிக்காதல்லவா...?” என்றார். அதற்கு இளைஞன் “இல்லை... அறிஞரே! கடுமையாக வலிக்கும். நான் இறந்தே விடுவேன்...” என்றான். உடனே அறிஞர் “இளைஞனே! அதைத்தான் நானும் சொல்கிறேன். எப்படி நீரை ஊற்றிய போதும் களி கலந்த நீரை ஊற்றிய போதும் உனக்கு வலிக்காதோ அது போன்றுதான் திராட்சையையோ, நீரையோ, புல்லையோ சாப்பிடுவதால் தீங்கில்லை. ஆனால் செங்கல்லாக மாறி விட்டால் எப்படி அது உன்னை அடித்தால் கொன்று விடுமோ அவ்வாறு தான் திராட்சையும், நீரும், புல்லும் மதுவாக மாறி விட்டால் உன் உடலை பாதித்து உன்னைக் கொன்று விடும். அதனால் தான் மது அருந்துவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை” என்றார். இதனைக் கேட்ட இளைஞன் தன் தவறை உணர்ந்து வருந்தினான். அறிஞரின் வாதாட்டத் திறமையைக் கண்டு வியந்தான். அவருக்கு நன்றி கூறினான். தமிழில் : எம்.எஸ்.எம்.நுஸ்ரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக