சனி, 17 நவம்பர், 2012

சேவலிடம் ஏமாந்த நரி


காட்டில் உள்ள மரத்தின் மேல் சேவல் ஒன்று வாழ்ந்து வந்தது. அது காட்டுவாசியானதால் கண்டதை எல்லாம் தின்று உடல் கொழுத்துத் திரிந்தது. நல்ல பலசாலியாகவும் இருந்தது. அது “கொக்கரக்கோ” என்று கத்தினால் காடே அதிரும்.
அது இருந்த மரத்தின் வழியாக தினந்தோறும் நரி ஒன்று செல்லும். போகும் போது வரும்போது “எப்படியாவது இந்தக் கொழுத்த சேவலைப் பிடித்து, ஒருநாள் உணவாக்கிக் கொள்ள வேண்டும்” என்று எண்ணியவாறு ஆசையுடன் சேவலைப் பார்க்கும். சேவலுக்கு நரியின் பார்வை புரிந்தது. அதனால் தனக்கு என்றேனும் ஆபத்து நேரிடலாம் என்று கருதி அது எச்சரிக்கையுடன் இருந்தது.

சேவல் அந்த மரத்தை விட்டு இறங்காத காரணத்தினால், தன் எண்ணத்தை ஈடேற்ற முடியாமல் தவித்துப் போயிற்று நரி.
இந்தச் சேவலைத் தந்திரத்தால் தான் வளைத்துப் போட்டு, தனக்கு விருந்தாக்கிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தது. ஆகவே, ஒருநாள் நரி அவ்வழியே வரும்போது அது மரத்தின் கீழ் அமர்ந்து சேவலிடம் பேச ஆரம்பித்தது.
“அழகிய சேவலே! உனக்கு விஷயமே தெரியாதா? இன்று நம்முடைய சிங்கராஜா ஒரு உத்தரவு போட்டிருக்கிறார். இன்று முதல் ஒரு வருடத்துக்கு யாரும், யாருக்கும் பகை கிடையாது. இது சமாதான ஆண்டு. எந்த விலங்குக்கும், மற்ற விலங்கால் பிரச்சினை வரக் கூடாது. பிரச்சினை வந்தால் கடும் தண்டனை தரப்படும். எனவே, எதிரிகளாக இருந்த விலங்குகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விட்டன. அவை காட்டோர அருவிப் பகுதியில் நிலா வெளிச்சத்தில் பாட்டுப் பாடி ஆடிக்கொண்டிருக்கின்றன. எல்லா விலங்குகளும் ஆளுக்கு ஒன்றை ஜோடி சேர்த்துக்கொண்டன. எனக்குத்தான் யாரும் இல்லை என்று நினைத்தபோது நீ என் ஞாபகத்துக்கு வந்தாய், வா நாமிருவரும் சேர்ந்து அருவிக் கரைக்குப் போய் மற்ற விலங்குகளுடன் சேர்ந்து சந்தோசமாக இருக்கலாம்” என்றது.
நரி பேசப் பேச சேவல் அதைப் பற்றிச் சிறிதும் கவனிக்காமல் வேறு ஒரு உயர்ந்த கிளைக்குச் சென்று தலையை இங்குமங்குமாக ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்த நரிக்கு எரிச்சலாக இருந்தது.
“நான் எவ்வளவு இனிய செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ என்னவென்றால் மரக்கிளைக்கு மேலே சென்று எதையோ வேடிக்கைப் பார்க்கிறாயே” என்றது.
“நரியாரே, நீங்கள் சொன்னதைக் கேட்டேன். ஆனால் அதைவிட முக்கியமான சமாச்சாரத்தை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்” என்றது.
“அதை விட முக்கியமான சமாச்சாரமா? அது என்ன?” என்றது நரி.
“வெகு தூரத்தில் இரண்டு உருவங்கள் ஓடி வந்து கொண்டிருக்கின்றன!”என்றது சேவல்.
“அவை எப்படி இருக்கின்றன?” என்று பயத்துடன் கேட்டது நரி.
“இரண்டும் நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் கண்கள் பளபளவென ஜொலிக்கின்றன. அங்கும். இங்கும் பார்த்து எதையோ மூக்கால் முகர்கின்றன. அதற்கு நான்கு கால்கள் இருக்கின்றன. உங்களை விட உயரமாக இருக்கின்றன. ஆ....இப்போது கூர்மையான கோரைப் பற்களும் தெரிகின்றன. ஒருவேளை அவை ஓநாய்களோ,” என்றது சேவல்.
“சரியாப் போச்சு, அவை ஓநாய்களில்லை. வேட்டை நாய்கள், பார்த்தால் கடித்துக் குதறி விடும்” என்று கூறியவாறு ஓட்டமெடுத்தது நரி.
நரி ஓடுவதை பார்த்து சேவல் சிரித்தது மகிழ்ச்சியுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogroll